சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டெட்டனஸ்என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல், மாடு, குதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்; வாய் திறக்க முடியாது; சிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது!

இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. இதற்குப் பிறகு எங்களின் முழு கவனமும் உமர்மீது திரும்பியது. இந்நோயால் படிப்பு பாதிக்கப்பட்டது. அன்னையார் செல்லம் கொடுக்கத் துவங்கினார்கள்.

உமர் படிக்கும் காலத்திலேயே வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டார். நண்பர்களோடு ஆராய்ச்சிப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது கருவிகளோடு போராடிக் கொண்டிருப்பார். அம்மாவின் கூப்பாடும் சாப்பாடும் பெரிதாகத் தெரியாது. நேரத்திற்குச் சாப்பிடாததால் வயிற்றுப் புண் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலங்களில் வயிற்றுப் புண்ணால் மிகவும் அவதிப்பட்டார். வயிற்றில் புண்ணையும் கருவிகளில் கண்ணையும் வைத்திருந்ததால் எண்ணும் எழுத்தும் எட்டி நின்றன.

ஒரு முறை துபாயில் அவருக்கு அம்மை நோய் கண்டது. 15 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்தார். ஆள் துணையின்றி மிகவும் துன்பப்பட்டார். பொறுமையாக இருந்தார். பொறுமைக்குப் பரிசும் காத்திருந்தது! இந்த கால கட்டத்தில் அவர் ஒரு இந்தியரிடம் வேலை செய்தார். அவர் ஒரு சிந்தி. கடைந்த மோரில் வெண்ணெய் ஒன்ஸ்மோர்கிடைக்குமா என்று பார்ப்பார். கஞ்ச நெஞ்சன். எதையும் சிந்தார்; எதையும் சிந்தியார்.

உதிரி பாகம் போடாமலே பழுது நீக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு, உதிரி பாகம் போட்டதாகச் சொல்லி பணம் வாங்கும்படிச் சொல்வார். உமரின் மனதுக்கு இது பெரும் உறுத்தலாக இருந்தது. இந்த இடத்தை விட்டு எப்படியும் வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த நேரத்தில் உமர் பணியாற்றிக் கொண்டிருந்த சிந்தியின் கடைக்கு ஒமான் நேஷனல் கம்பெனியிலிருந்து நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிகள் பழுது நீக்குவதற்காக வந்தன. இதன் பொருட்டு அந்தக் கம்பெனிக்கு போய் வரும் வாய்ப்புக் கிட்டியது. மேலாளரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. மேலாளர் தன் நிறுவனத்திற்கு வந்துவிடும்படி உமரைக் கேட்டுக்கொண்டார்.

அம்மை நோயால் வீட்டில் இருந்த இந்த விடுமுறை நேரம் உமருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒமான் நேஷனல் மேலாளருடன் அடிக்கடி தொடர்புகொள்ள முடிந்தது. நேர்முகத் தேர்வு போன்முகத் தேர்வாக அமைந்தது. உமர் நேஷனலுக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். பணி ஆணை கிடைத்தது. விசாவுக்கும் ஏற்பாடு செய்தனர். துபை ஒமான் நேஷனல் நிறுவனத்தில் விசா பெற்ற உமர்தம்பிக்கு, நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிக்கு சர்வீஸ் செய்பவராக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டிவி மட்டுமல்லாமல், நேஷனல், பானாசோனிக் நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் உமர் மன்னனாகத் திகழ்ந்தார்!

உமருக்கு குடும்ப விசா கிடைத்தது. புதுப்பிப்பதற்காக அனுப்பட்ட மனைவி, மக்கள் பாஸ்போர்ட் அப்போதிருந்த நெருக்கடி நிலை காரணமாக ஓராண்டுக்குப் பிறகுதான் கிடைத்தது. விசாவை பல முறை புதுப்பித்தோம். அதற்கு முன் உமரை அபுதாபிக்கு மாற்றிவிட்டார்கள். பாஸ்போர்ட் முன்னரே கிடைத்திருந்தால் மாற்றலாகி இருக்கமாட்டார். உமர் குடும்பத்தோடு அபுதாபியில் வசித்தார். கொடுக்கப்பட்ட வீடு தமிழர்கள், மலையாளிகள் அதிகம் இல்லாத பகுதி. அவர் வீடு இருந்த கட்டிடத்தில் அரபி பேசும் மக்கள் மட்டுமே இருந்தார்கள். இது அவரது மனைவிக்கும் மகன்களுக்கும் மிகுத்த தனிமையை ஏற்படுத்தியது. உமர் பணிகளுக் கிடையே வந்து பார்த்துப் போவார். இருப்பினும் மகழ்ச்சி இல்லை. பையன்களை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு வியாழனும் அபுதாபி சென்று விடுவேன். சனிக்கிழமை அப்படியே துபை வந்து என் பணிக்குச் சென்றுவிடுவேன்.

உமர் தன்னை துபாய்க்கு மாற்றித் தரும்படி கேட்டிருந்தார். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. துபாய்க்கு (தலைமையகம்) உமர் தேவை என்பதால் அவரை துபாய்க்கு மாற்றினார்கள். இப்போது உமர் குடும்பம் காகலகலப்புக்கு மீண்டது. எனக்கும் இரட்டிப்பு ஆதாயமாக ஆனது. உமர் அபுதாபியிலேயே இருந்திருந்தால் மேலாளர் பதவியை உடனே பெற்றிருந்திருப்பார். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்படக்கூடாது அல்லவா?

தொடரும் ...


Continue reading at the original source →