இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.


ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

Continue reading at the original source →